Saturday, 5 August 2017

ராஜகுமாரன் சட்டை

எதை பற்றிய கவலையும் இல்லாமல் மிக தீவிரமாக நாளைய தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்தான் குமார். நண்பர்கள் சாப்பிட அழைத்தும் செல்லவில்லை. தேர்வு அவனுக்கு முக்கியமானது என்பதை அவன் அறிவான். தமிழ் பள்ளியில் படித்து முதன் முதலாக கல்லூரியில் ஆங்கில தேர்வு என்பது எல்லோரையும் போல அவனையும் பதட்டமான மனநிலையிலையே வைத்து இருந்தது. பத்து மணியை தொட்டது கடிகாரம். மற்ற மாணவர்கள் குமார் சாப்பிட்டு வந்து படி, இன்னும் அரை மணி நேரத்துல ஹாஸ்டல் கேன்டீன் மூடி விடும் என்றார்கள். 

குமார் கேன்டீன் நோக்கி பறந்தான்.மூடி விடும் உணவு இருக்காது என்று வேகமாக கேன்டீன் அடைந்தான். நாளை தேர்வு என்பதால் எல்லோரும் முன்னரே சாப்பிட்டு சென்று விட்டனர். எனக்கும் தேர்வுக்கும் என்ன சம்பந்தம் என்னும் சிலர் மட்டுமே உணவு முடிந்தும் அரட்டை அடித்து கொண்டிருந்தனர். குமாருக்கு மிச்சம் மீதி என ஏதோ கிடைத்தது. உணவு பற்றி அவன் வறுத்தம் கொண்டதே கிடையாது எதையும் மானம்கோனாமல் உண்பான், விவசாயி மகன் ஆயிற்றே.

கல்லூரிக்கும் தங்கும் விடுதிக்கும் ஒரு 100 மீட்டர் தூரம் இருக்கும். ஹாஸ்டல் நோக்கி மெதுவாக சென்று கொண்டு இருந்தான். திடீரென காற்றை கிழித்து அவன் காதை தொட்டது ஒரு சத்தம். தூரத்தில் இருந்து ஒரு சிவப்பு நிற கதிர் ஹாஸ்டலை நோக்கி வந்தது. நெருங்கி வர வர அது இன்னும் பல நிறங்களாக பிரிந்தது. நேராக அவன் துவைத்து காயபோட்டு இருந்த சட்டையை நோக்கி சென்ற அக்கதிர் நாலு ஐந்தாக அவன் சட்டையை மட்டும் கிழித்து எறிந்து சென்றது. இருப்பதே ஐந்து சட்டைகள் அதிலும் ஒன்று இப்படி ஆனதே என்ற திகைப்பில் அதையே நோக்கி கொண்டிருந்த குமார் காலில் வலிப்பது போல இருந்தது.

பட்டென விழித்தான் குமார், கணேஷ் அவன் காலை உதைத்து கல்லூரிக்கு நேரம் ஆச்சு கிளம்புடா சோப்பு டப்பா என்றான். அட கனவா என்று ஆச்சர்யம் கொள்ளவில்லை, என்ன  கனவுடா என வறுத்த படத்தான் வைத்தது.  அவன் வருத்தத்துக்கு காரணம் இல்லாமல் இல்லை. சென்ற மாதம் ஊருக்கு சென்ற குமார் அப்பா புதிதாக மூன்று சட்டை வேண்டும் என்று சொல்லி இருந்தான்.
இப்போது உடுப்பது பள்ளி காலங்களில் எடுத்த உடைகளே. அப்பாவோ ஆகட்டும் பார்க்கலாம் என்றார் நடுத்தர வர்க்கத்து அப்பாக்களை போலவே. நேற்று இரவு கார்ல் சாகனின் காஸ்மோஸ் தியரி பற்றி நூலகத்தில் படித்து கொண்டிருந்தான். கல்லூரியில் நூலகம்  சென்று படிக்கும் வெகு சிலரில் குமாரும் ஒருவன். இன்னும் ஒரு மாதத்தில் முதல் தேர்வு வேறு உள்ளது. இதை எல்லாம் எண்ணி குழம்பியதால் தான் இப்படி ஒரு கனவு என எண்ணிக்கொண்டே காலை கடன் முடித்து வகுப்பு செல்ல தயராகிவிட்டான். எப்போதும் ஆளுக்கு முன் குளித்து காலை உணவை முடித்து நூலகம் சென்று செய்தித்தாள் படித்து பின்னர் வகுப்புக்கு செல்வது குமாரின் பழக்கம். மற்றவர்கள் கேன்டீன் வரை மட்டுமே அவனுடன் வருவார்கள். எதேச்சையாக ஒரு செய்தி கண்ணில் பட்டது குமாருக்கு.

"விண்ணை முட்டியது தக்காளி விலை, விவசாயிகள் மகிழ்ச்சி" என்பதே அது. குமாரின் எண்ணங்கள் சிறகை விரித்து பறந்து மின்னல் வேகத்தில் ஊருக்கு சென்றது. சென்ற மாதம் ஊருக்கு போன அப்பா தோட்டத்தில் தக்காளி நாத்து வாங்கி நட்டது ஞாபகம் வந்தது. இனி செந்நிற கதிரோ நீலகதிரோ எது வந்து சட்டையை கிழித்தால் என்ன , புதுசட்டைகள் கிடைக்க போகுது என்று உள்ளுக்குள் பூரித்தான் குமார். மீதி செய்திகளையும் புரட்டிவிட்டு கல்லூரிக்கு சென்றான்.

காலை வகுப்புகள் முடிந்தது. உணவு இடைவேளையில் நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தான். சரியாக முடியும் நேரத்தில் அவனது போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்பா கூப்பிடுகிறார் என்று சொல்லி சாப்பிட்டு முடித்த தட்டை எடுத்துக்கொண்டு கிளம்பினான் கழுவும் இடத்திற்கு. தட்டை கழுவும் இடத்தில் வைத்துவிட்டு அப்பா என்றான், என்னப்பா  சாப்பிட்டியா என்றார் அப்பா, ம்ம் சாப்பிட்டேன் அப்பா. சொல்லுங்கபப்பா என்றான் குமார். ஒன்னும் இல்லப்பா அக்கா வந்துருக்கா, கயல்விழி மாமா கிட்ட பேசணும் ஒரே வீம்பு அதான் மதியம் சாப்பிட வந்துருப்பனு கூப்புட்டோம் என்றார்.

குடுங்கப்பா என்றான் குமார். மாமா நல்லாருக்கீயா, சாப்டியா, ஊருக்கு வா என்னை பாக்க, என்று கட கடவென பேசி முடித்தாள் மழலை குரலில் அம்மா சொல்ல சொல்ல. குமாரும் சாப்பிட்டேன் கயல், ஊருக்கு அடுத்த மாசம் வரேன் என்று சொல்லிவிட்டு தாத்தாவிடம் குடு என்றான். இந்தா குடுக்குறேன் என்று சொல்லிவிட்டு தாத்தாவிடம் போனை குடுத்த வேகத்தில் துள்ளிகுதித்து வெளியே விளையாட சென்றாள் கயல்.
அப்பா என்றான் குமார். சொல்லுப்பா என்றார் அப்பா. சில நொடி மௌனத்திற்கு பிறகு அப்பா எனக்கு சட்டை எடுத்து தரேன் சொன்னிங்க, என்றான். பாக்கலாம் என்றார் எப்போதும் போல, இதன் அர்த்தம் குமார் நன்றாக அறிவான். சற்றே குரலை உயர்த்தி இதைத்தான் எப்போதும் சொல்றீங்க ஆனா எடுத்து தரமாட்டேங்குறிங்க என்றான். அப்பா சொன்னார் தம்பி காசு வரட்டும் அடுத்த முறை ஊருக்கு வரும் போது எடுத்து தரேன் என்றார். அப்பா காலைல பேப்பர் பாத்தேன் அப்பா தக்காளி விலை நூற்று ஐம்பது ரூபாய்க்கு போகுதாம். நம்ம காட்டுல தக்காளி போட்ருக்கோமே, அந்த காசை வச்சு வாங்கி தங்கப்பா என்றான் குமார். அப்பாவிற்கு புரிந்து விட்டது குமார் ஏன் வழக்கத்திற்கு மாறாக அடம் பிடிக்கிறான் என்று, அப்பா தொடர்ந்தார், தக்காளி விலை அதிகம் விவசாயி மகிழ்ச்சின்னு போட்டானே, தண்ணி இல்லாம எத்தனை நாத்து கருகிப்போச்சுன்னு அவனுக்கு எப்படி தெரியும் குமாரு என்றார் குரலில் சற்று தொய்வுடன். குமாருக்கு புரிந்துவிட்டது. சரிப்பா அடுத்த முறை வரும்போது வாங்கிக்கிறேன் என்று சொல்லி போனை வைத்தான்.

கை காய்ந்து விட்டது, பைப்பை திறந்து கையை கழுவி விட்டு திரும்பும் போது  பக்கத்து பைப்பில் தண்ணீர் வீணாக ஒழுகுவதை கண்டு குழாயை இறுக்கமாக அடைத்தான். ஏனோ அவன் மனம் அந்த இறுக்கத்தில் இளகியது.

No comments:

Post a Comment

தும்பல்

பேளூர் அடுத்து நாங்கள் சென்ற இடம் தும்பல். கல்ராயன் மலையின் கிழக்கு பக்கத்தில்  அமைந்துள்ள ஊர் தும்பல்.  அங்கே உள்ள அரசு மருத்துவமனைக்கு அர...